YOUR QUESTION இயேசு சீக்கிரம் வருகிறார் என்று பல்லாண்டுகளாகக் கூறுகிறீர்கள். இன்னும் வரவில்லையே! OUR ANSWER: இதோ, நான் வருகிறேன். அவரவர் செயலுக்கேற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைமாறு என்னிடமுள்ளது (தி.வெ.22:12) என்று இயேசு கூறினார். அவர் விரைவில் வருவேன் என்று கூறினாலும், எப்போது என்று நாள் குறிப்பிட்டு கூறவில்லை. இன்னும் தெளிவாக கூறினால், அவர் எப்போது திரும்ப வருவார் என்று ஒருமுறை இயேசுவின் சீடர்கள் கேட்டபோது, “அந்நாள் தந்தை ஒருவருக்கே தெரியும்” என்று கூறினார் (மாற்.13:32). சுனாமி என்ற ஆழிப்பேரலைகளால் தமிழகத்துக்கு சேதம்வரும் என்று 2004-க்கு முன் ஒரு சமுதாய விழிப்புணர்வு பணியாளர் தமிழக கடற்கரை சந்து பொந்துகளெல்லாம் நுழைந்து கூவிக்கொண்டே சென்றால் மக்கள் அவரை, ‘இவன் பைத்தியக்காரன்’ என்று எள்ளி நகையாடுவார்கள்; அல்லவா? அதுபோலவே இயேசுவின் இரண்டாம் வருகையும் பலரால் கிண்டலாக நினைக்கப்படுகிறது. மனிதன் தன்னைப் படைத்த கடவுளோடு இணைய வேண்டுமென்று கடவுள் காலம் தாழ்த்துகிறார் என்பதை விளக்கும் வேதபகுதியை கீழே வாசியுங்கள். இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை எள்ளிநகையாடுவர். அவர்கள், “அவரது வருகையைப் பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர் ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கிறதே” என்று சொல்லுவார்கள். அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. ஆனால், அவர் அவ்வாறு காலம் தாழ்த்துவதில்லை, ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாக சிலர் நினைக்கின்றனர். மாறாக உங்களுக்காக பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம்மாற வேண்டுமென விரும்புகிறார் (2பேது.3:8-9).
Posted on: Thu, 10 Oct 2013 09:02:20 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015