தமிழெனும் - TopicsExpress



          

தமிழெனும் கேள்வி? ===================== தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம். மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை அந்தக் குழந்தையின் பெற்றோர்களுடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத ஒரு குமுகாயத்தில், தமிழ் அறியாத ஒரு குமுகாயத்தில் வளர்த்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தமிழப் பிள்ளையாக அல்லாமல் வேறு வகைப் பிள்ளையாகத்தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? உப்பில்லாத நல்ல தண்ணீரில் வளர்ந்த ஒரு கெண்டை மீனைக் கொண்டு போய் உப்பங் கழியில் போட்டால் அது உயிர் வாழ முடியுமோ? பின் புலத்தை மீறிய ஒரு வாழ்வு உண்டோ ? ஊடகம், ஊடகம் என்று சொல்லி மொழியின் பங்கைக் குறைத்து விட்டோ ம் அல்லவா? மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ? இப்பொழுது நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து விட்டீர்கள், அல்லது வேறு நாட்டில் பிறந்தும் உங்கள் பெற்றோர் தமிழ்ப் பின்புலத்தை விடாது காப்பாற்றி வருகிறார்கள், இந்த நிலையில் நீங்கள் தமிழை விட முடியுமா? ஒன்று கிணற்றைத் தாண்டாமல் இருக்கலாம், அல்லது முற்றிலும் தாண்டலாம்; இடைப் பட்ட நிலையில் பாதிக் கிணற்றைத் தாண்டி உயிர் வாழ முடியுமோ? தமிழும் அது போலத்தான். தமிழ் எனும் பின்புலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், இலக்கணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ளாமல் தமிழ் அறியாதவனாக இருக்கலாம்; அல்லது தெரிந்து கொண்டு தமிழ் அறிந்தவனாக இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பது ஒருவகையில் திரிசங்கு சொர்க்கமே! தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்? "தமிழ் சோறு போடுமா?" என்று சிலர் கேட்கிறார்கள்; தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; தமிழ்த் தாளிகைக்காரருக்குச் சோறு போடக் கூடும்; இன்னும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; ஆனால் பொதுவான மற்றவருக்குச் சோறு போடாவிட்டாலும், சிந்தனையைக் கற்றுக் கொடுக்கிறது என்று அறிவீர்களா? மேலே நான் சொன்ன தமிழ் ஆக்கங்களை எல்லாம் படிக்கும் போது, தமிழ் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? ஏரணம் (logic) என்பது சிந்தனை வளர்ச்சியில் காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்ளுவது ஓரளவு முடியும் என்றாலும் தாய்மொழியில் கற்பது எளிது என்று அறிவீர்களா? சிந்தனை முறை கூட மொழியால் மாறுகிறது என்று அறிவீர்களோ? நான் அவனைப் பார்த்தேன் என்று சொல்லும் போது கொஞ்சம் நின்று எண்ணிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கிறது அல்லவா? செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிலைப் படுத்திப் பிறகுதான் தமிழில் வினையைச் சொல்லுகிறோம். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழிய மொழிகளில், இந்தச் சிந்தனை முறை இயல்பானது. இதை SOV (Subject - Object - Verb) என்று மொழியியலார் சொல்லுவார்கள். மாறாக மேலை மொழிகளில் SVO - நான் பார்த்தேன் அவனை என்ற முறையில் வாக்கியத்தை அமைக்க வேண்டும். SOV சிந்தனை முறை இருக்கும் ஒருவன் SVO பழக்கம் இருக்கும் ஒருவனைச் சட்டென்று புரிந்து கொள்ளுவது கடினமே. சப்பானியர்கள் முற்றிலும் SOV பழக்கம் உடையவர்கள். அவர்கள் வெள்ளைக் காரர்களைப் புரிந்து கொள்ளுவதும், வெள்ளைக் காரர்கள் சப்பானியரைப் புரிந்துகொள்ளுவதும் மிகக் கடினம் என்பார்கள். அதே பொழுது நாம் ஓரோ முறை இலக்கியத்தில் SVO முறையைப் பயன்படுத்துகிறோம். சீதையைப் பார்த்து வந்த சேதியைச் சொல்லும் அனுமன் இராமனிடம் சொல்லுவதாகக் கம்பன் சொல்லுவான்: "கண்டேன் சீதையை"; இது போன்ற சொல்லாட்சிகள் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு. அதாவது பெரும்பான்மை SOV என்ற சிந்திக்கும் நாம் ஓரோ வழி SVO என்பது போலும் சிந்திக்கிறோம். இந்தியர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் பாலமாக இருப்பது இதனால் தான் போலும். என்ன சொல்ல வருகிறேன் என்றால், மொழி நம் சிந்தனையைக் கட்டுப் படுத்துகிறது. நீ உன் பெற்றோருக்கு எத்தனையாவது பிள்ளை என்ற கேள்வி தமிழில் மிக இயல்பாக எழும். ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்துத்தான் சொல்ல இயலும். இது போல ஆங்கிலத்தில் சொல்லுவது சிலபோதுகளில் தமிழில் நேரடியாய்ச் சொல்ல முடியாது. சரி, தமிழுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? அதாவது தமிழின் பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருகிறோம்? இருக்கின்ற சொத்தோடு கூட, என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்? இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேடவேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.
Posted on: Tue, 25 Jun 2013 04:32:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015